மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வு: விதி மீறிய 3 உணவகங்களுக்கு ரூ.52000 அபராதம்!
சென்னை: சென்னையில் விதி மீறிய 3 உணவகங்களுக்கு ரூ.52000 அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து உணவகங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
உணவகங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்தல் போன்றவை கண்டிப்பாக பின்பற்றபட வேண்டும்.

ஆய்வு குழுக்கள்
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் கடந்த சில வாரங்களாக உணவகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. உணவகங்களில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் கையாளப்படுகின்றனவா எனவும் பதப்படுத்திய உணவுகளின் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மண்டல நல அலுவலரின் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் ஆய்வு
இந்த குழுக்கள் உணவகங்களில் உள்ள உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பால், காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்களுக்கான சேமிப்பு வசதிகள், மூலப் பொருட்களை சேமிக்கும் இடங்கள், குளிரூட்டிகள், குளிர்சாதன பெட்டிகள் உள்பட பல்வேறு வகையான உணவு சேமிப்பு முறைகள் மற்றும் சமைக்கும் உணவகங்களில் மக்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உயிரினங்களான நாய், பூனை, எலி நடமாட்டம் குறித்தும் உணவு சமைக்கும் இடங்கள் இடங்கள் மற்றும் பாத்திரங்கள் தூய்மையாக பராமரிப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

குறைபாடு கண்டுபிடிப்பு
மேலும், உணவகங்களில் கிருமிநாமினி கொண்டு சுத்தம் செய்தல், சமையலறை புகைபோக்கி, மேல்நிலை தொட்டி கழிவுநீர் வசதி சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி 19.08.2021 அன்று அணைத்து மண்டலங்களில் உள்ள 45 பகுதிகள் அடங்கிய 155 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்போது 61 உணவகங்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

அபராதம் விதிப்பு
மேலும் 8 உணவகங்களில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கிலோ எடையுள்ள ஆரோக்கியமற்ற உணவு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 3 உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களும் அரசின் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவினை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications