'அரும்பாக்கத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்..' சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை: அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்பவர்களுக்குக் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம் எனச் சென்னை மாநகராட்சி பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை அரும்பாக்கம் ஆர்கே நகரில் கூவம் நதிக்கரையோரம் சுமார் 30 ஆண்டுகளாகக் குடிசைகளை ஏற்படுத்தி, மக்கள் வசித்து வருகின்றனர்.
கூவம் நதிக்கரையோரம் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளதால், வெள்ளம் ஏற்படும் சமயங்களில் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அங்கு வசிக்கும் மக்களை மாற்றுக் குடியிருப்புக்கு செல்லுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

எதிர்ப்பு
மேலும், அங்கு அமைந்திருந்த 93 குடியிருப்புகள் சமீபத்தில் அகற்றப்பட்டது. அதற்கு அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்பவர்களுக்குக் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது எனச் சென்னை மாநகராட்சி பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

93 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள்
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீர்நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் ஒரு பகுதியாகப் பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர்ப் பகுதியில் கூவம் நதிக்கரையோரம் 243 குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் எனக் கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 93 ஆக்கிரமிப்பு குடும்பங்களுக்குத் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை
மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பாதுகாப்பாக மறுகுடியமர்த்தப்படுவார்கள். மேலும் ராதாகிருஷ்ணன் நகர்ப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு சூடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இடிக்கக் கூடாது
எனவே, ஆக்கிரமிப்பு பகுதியில் கூடியிருக்கும் எஞ்சிய மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசைப் பசூதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என பொதுப்பணித் துறைக்கு மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications