ஆக்ஷனில் மேயர் பிரியா.. சென்னை மாநகராட்சியின் செம முடிவு.. வருவாய்த்துறை சேவைக்கு இனி கியூஆர் கோடு
சென்னை: சென்னை மாநகராட்சியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சில புதிய சேவைகளை மேயர் பிரியா துவக்கி வைத்திருக்கிறார்.. அத்துடன், 400 தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ரூபாய் 11,82,300 மதிப்பிலான சீருடைகளை மேயர் பிரியா வழங்கினார்.
மின்ஆளுமை, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான முயற்சியை மாநில அரசு எடுத்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் 80 லட்சம் நுகர்வோர் உள்ள நிலையில், இவர்களது வீடுகளில் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படுகிறது.. இதன்மூலும் பொதுமக்கள் ஸ்கேன் செய்து குடிநீர் வரி, சொத்து வரியை கட்டலாம். அதேபோல, மாநகராட்சி பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தாலும் இந்த கியூ.ஆர். குறியீடு மூலம் தெரிவிக்கலாம்.
மறு மதிப்பீடு: இப்படிப்பட்ட சூழலில், சென்னை மாநகராட்சியின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வருவாய்த் துறையால் வழங்கப்படும் புதிய, மறு மதிப்பீடு, சொத்து வரி மதிப்பீடு, சொத்து வரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை பொதுமக்கள் அறியும் வகையிலான விரைவு தகவல் குறியீடு (கியூஆர் கோடு) தொழில்நுட்பப் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அத்துடன், வருவாய்த் துறையால் வழங்கப்படும் புதிய, மறு மதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பயனாளர்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து நகல் எடுக்க வழிவகை ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நடவடிக்கை: கடந்த 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பிலும், சென்னை மாநகராட்சியின் சமூகநலக் கூடங்களை முன்பதிவு செய்யும் முறையை இணையவழி வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நிறைவேற்றும் வகையில், வருவாய்த்துறையில் கியூஆர் கோடு தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்தல் மற்றும் சமூக நலக் கூடங்களை இணையவழி வாயிலாக முன்பதிவு செய்தல் ஆகிய அறிவிப்புகளை செயல்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. மேற்கண்ட அனைத்து புதிய சேவைகளையும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் புரியா தொடங்கி வைத்தார்.
சீருடைகள்: அதேபோல, இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பணியையும் மேயர் பிரியா துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டில், சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை பள்ளி தேசிய மாணவர் படை மாணவ, மாணவியரில் 400 தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ரூபாய் 11,82,300 மதிப்பிலான சீருடைகளை மேயர் பிரியா வழங்கினார்.












Click it and Unblock the Notifications