ஹே ஜாலி நாளை முதல் கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி.. சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்
சென்னை: கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதை அடுத்து அங்குள்ள குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
Recommended Video
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகம் கூடும் இடங்களான கடற்கரைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு நீட்டிப்பின்போது கடற்கரைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
எனினும் நடைப்பயிற்சி என்ற பெயரில் பலர் கடற்கரைக்குள் நுழைந்ததை அடுத்து அவர்களை போலீஸார் வெளியேற்றி வந்தனர். பின்னர் கடற்கரை மணலில் மட்டும் உட்கார அனுமதி அளித்தனர். ஆனாலும் மக்கள் தண்ணீரில் கூட்டம் கூட்டமாக இறங்கி குதூகலமடைந்தனர்.

அதிகரிக்கும் அச்சம்
இதனால் கொரோனா தொற்று மேலும் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்தது. இந்த நிலையில் போலீஸாரும் கடற்கரைக்கு வரும் பொதுமக்களிடம் அன்பாக சொல்லி அவர்களை சீக்கிரமாக வெளியேற சொல்லி வந்தனர். எனினும் கடற்கரைகளுக்கு வரும் மக்கள் கூட்டம் குறையவே இல்லை. சிலர் மாஸ்க் அணியாமலேயே கடற்கரைகளுக்கு வந்தனர்.

கடற்கரை
மேலும் பலர் தாடி மாஸ்க் போல் அணிந்து கொண்டு கடற்கரைக்கு வந்திருந்தனர். தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருப்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அறிக்கை
இதுகுறித்து தமிழக அரசு தனது அறிக்கையில் கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட உரிய நடவடிக்கை எடுக்க மாலட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் செயல்பாடுகளும் நாளை முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

100 சதவீதம் பணியாளர்கள்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். நாளை முதல் கடற்கரைகளை திறக்கப்படுவதை அடுத்து அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடற்கரை மணலில் உள்ள குப்பை கூளங்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

கடற்கரையில் வியாபாரிகள்
அது போல் நாளை முதல் கடைகளை அமைக்க கடற்கரையில் உள்ள வியாபாரிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். பஜ்ஜி போண்டா, வடை கடையினர் , பாணி பூரி, மீன் வறுவல், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்பனையகம் உள்ளிட்டவற்றை திறப்பதற்காக அங்குள்ள பணியாளர்கள் அவர்களது இடத்தை சுத்தப்படுத்தி வருகிறார்கள்.

உரிமையாளர்கள் உற்சாகம்
அது போல் நாளை முதல் தியேட்டர்கள் திறக்கப்படுவதால் இருக்கைகள், பாப் கார்ன் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள், பார்க்கிங், கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பல மாதங்கள் கழித்து தியேட்டர்கள் திறக்கப்படுவதால் உரிமையாளர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு பலகைகளும் தயாராகி வருகிறது. அது போல் ஒவ்வொரு ஷோ முடிந்தவுடன் தியேட்டர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுவதால் இந்த இடம் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என தியேட்டர்களின் மேலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications