ஒரு சொட்டு மழைநீர் தேங்காது.. பம்புகள் வாடகை மட்டும் ரூ.44 கோடி.. ரெடியாகும் சென்னை மாநாகராட்சி
சென்னை: வடகிழக்கு பருவ மழைக்குத் தயாராகும் வகையில் சென்னை மாநகராட்சி தரப்பில் 447 டிராக்டர்கள் மற்றும் 121 பம்புகளை ரூ.44.28 கோடிக்கு வாடகைக்கு எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 447 டிராக்டர்களை 6 மாதமும், 121 பம்புகளை 3 மாதமும் வாடகைக்கு எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக டிசம்பர் மாதம் நெருங்கிவிட்டாலே சென்னைவாசிகள் மழைக்கு அஞ்சும் நிலை உருவாகி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கும் சூழல் ஏற்படும். என்னதான் தமிழக அரசு தரப்பிலும், சென்னை மாநகராட்சி தரப்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதைத் தடுக்க முடியவில்லை.

கடந்த ஆண்டு வரையிலும் இதே நிலை நீடித்து வந்தது. அதேபோல் தமிழக அரசு தரப்பில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏரிகளில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றுதல், ஏரிகளின் கரையை பலப்படுத்துதல், பாதாளச் சாக்கடை பணிகள், உள்ளிட்ட பல்வேறு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், சென்னை மழையை எதிர்கொள்ள மாநகராட்சி இப்போது முதலே தயாராகி வருகிறது. அதற்கேற்ப அண்ணா நகரில் தாழ்வான தேங்கும் நீரை அகற்றவும், மழைநீர் வடிகால்களை இடித்துவிட்டு மறுகட்டமைப்பு செய்யவும் ரூ.4.41 கோடி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பம்புகளுடன் கூடிய டிராக்டர்கள் மற்றும் பம்புகளை வாடகைக்கு எடுக்க மட்டும் ரூ.44.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 447 டிராக்டர்களும், 121 பம்புகளும் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன. தற்போது சென்னை மாநகராட்சி கைவசம் உள்ள பம்புகளின் திறன் போதுமானதாக இல்லாததால், கொள்முதல் மற்றும் பராமரிப்பு செலவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
447 டிராக்டர்கள் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலும், 121 பம்புகள் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே மழைநீர் வடிகால் பணிகளுக்குத் தமிழக அரசு நிதி ஒதுக்கி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சியும் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்வது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
அதேபோல் மழைநீர் வடிவால் பணிகளை இடித்துவிட்டு மறுகட்டமைப்பு செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4.41 கோடியில் அண்ணா நகர் பகுதியில் உள்ள உமையாள் தெருவுக்கு ரூ.1.2 கோடியும், மாரியம்மாள் கோயில் முதல் தெரு முதல் பிள்ளையார் கோயில் தெரு வரை ரூ.1.78 கோடியும், அமராவதி நகர் மெயின் சாலை முதல் பாஞ்சாலி அம்மன் கோயில் சாலை வரை ரூ.1.61 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications