சென்னை மாநகராட்சி இணையதளமே முடங்கியது.. ஒரே நாளில் குவிந்த விண்ணப்பத்தால் மிரண்ட அதிகாரிகள்
சென்னை: சென்னை மாநகராட்சி இணையதளத்தில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற ஒரே நேரத்தில் பலரும் விண்ணப்பித்ததால் அந்த இணையதளம் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரை மொத்தமாக முடங்கியது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் கடந்த மே 5ம் தேதி சிறுமி ஒருவர் விளையாடி கொண்டிருந்தார். அப்போது நாயின் உரிமையாளர் அஜாக்கிரதையுடன் 2 வெளிநாட்டு ரக ராட்வீலர் வளர்ப்பு நாய்களை உலாவவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியை நாய் கடித்து குதறியது. இந்த சம்பவத்தில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் எனவும், உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி கடுமையாக எச்சரித்தது. முன்னதாகவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாகும். ஆனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் அதனை பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை.. கடந்த ஆண்டு 1,560 பேர் மட்டுமே செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்றிருந்தனர். கடந்த மே 4-ந்தேதி வரையில் 125 போ் மட்டுமே செல்லப்பிராணி உரிமம் பெற பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், மே 5ம் தேதி ராட்வீலர் நாய் சிறுமியை தாக்கிய பின்னர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் பெற வேண்டும் மாநகராட்சி கடுமையாக எச்சரித்தது. இதையடுத்தே செல்லப்பிராணிகள் உரிமைம் பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் . செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற https//chennaicorporation.gov.in/ என்ற மாநகராட்சி இணையதளத்தில் கடந்த சில நாட்களாக விண்ணப்பித்து வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் திடீரென சென்னை மாநகராட்சி இணையதளமே முடங்கியது. இதனால் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுனர்கள், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்கள். இதையடுத்து புதன்கிழமை 12.45 மணிக்கு இணையதளம் சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதனிடையே சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஒரே வாரத்தில் 7 ஆயிரத்து 883 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். இதில், உரிய ஆவணங்களை இணைக்காததால் 4 ஆயிரத்து 168 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 1,175 பேருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. மேலும், 2 ஆயிரத்து 540 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் கமல் உசேன் கூறினார்.












Click it and Unblock the Notifications