ரூ.22 கோடியில் மாதவரம், மணலி ஏரியில் நடக்கும் அற்புதம்.. பொங்கல் முதல் படகு சவாரி.. மாநகராட்சி செம்ம
சென்னை: சென்னை மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரூ.22 கோடியில் மாதவரம், மணலி ஏரிகளில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகை முதல் படகு சவாரி தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. ஏரிகளுக்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் பசுமை பரப்பு குறைவாகவே உள்ளது. எங்கு திரும்பினாலும், கட்டிடங்களும், பாலங்களும் தான் இருக்கிறது. ஆங்காங்கே ஏரிகள் இருக்கிறது. அந்த ஏரிகளுமே பல ஆக்கிரமிப்பில் உள்ளன. என்ன தான் அரசு நடவடிக்கை எடுத்தாலும், காடுகளை புதிதாக உருவாக்க முடியாதநிலையே நீடிக்கிறது. எனவே இருக்கும் ஏரிகளை பாதுகாத்து, அங்கு பசுமை வனப்பரப்பை அதிகரிக்கவும், விளையாட்டு கூடங்கள், நடைபயிற்சி அமைப்புகள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்றவை அமைக்கப்படுகிறது.

இப்படி ஏரிகளை சுற்றி பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பெரிய ஏரிகளான 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாதவரம் ஏரி 11.78 கோடி செலவிலும், 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணலி ஏரிகள் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
மணலி ஏரியை சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.10.6 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி, கரையமைத்து, நடைபாதை, பூங்கா, அமரும் இருக்கை போன்ற வசதிகளுடன் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. மேலும் ஏரிகளுக்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, நீர்வரத்து கால்வாய்களில் ஷட்டர் கேட்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஏரிகள் எல்லா காலக்கட்டத்திலும் சுத்தமாக இருக்கும்.
தற்போது மணலி, மாதவரம் ஏரிகள் புனரமைக்கப்பட்ட உடன். 2 ஏரிகளிலும் படகு சவாரி சேவை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக, மோட்டார் படகுகளை இயக்க போதுமான ஆழம் உள்ளதா என்பதை கண்டறிய சோதனைகளும் நடத்தப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் மோட்டார் படகுகள், பெடல் படகுகள் போன்றவற்றை வாங்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. வருகிற பொங்கல் பண்டிகை அன்று படகு சவாரி விட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications