சுதர்சனம் கொலை வழக்கு! பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறை! ஜெயில்தார் சிங் விடுதலை!
சென்னை: அதிமுக எம்எல்ஏவாகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரம் 4ஆவது குற்றவாளி ஜெயில்தர் சிங் விடுதலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த சுதர்சனத்தின் வீட்டு கதவை கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி யாரோ தட்டினர். உடனே வீட்டு மாடியில் இருந்த சுதர்சனம் கீழே இறங்கிய போது முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்களை பார்த்து சப்தமிட்டார்.
இதையடுத்து பவாரியா கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டிற்குச் சென்ற மனைவி, மகனை தாக்கிவிட்டு 62 பவுன் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் தேடப்பட்டனர்.
அந்த வகையில் ராஜஸ்தான், ஹரியானாவை சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். கைதான 9 பேரில் 3 பேர் ஜாமீனில் வெளியாகி தலைமறைவாகிவிட்டனர். 2 பேர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டனர்.
தற்போது சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜாமீன் பெற்ற ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து பவாரியா கும்பலைச் சேர்ந்த ஜெகதீஷ், அசோக், ராகேஷ் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு கடந்தச வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவிப்பதாக கூறியிருந்தது.
சுதர்சனம் குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
அதில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அது போல் சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் வீட்டில் நடந்த பவாரியா கும்பலின் கொலை கொள்ளை வழக்கில் ஜெயில்தார் சிங் கைது செய்யப்பட்டிருந்தார். சுதர்சனம் கொலை வழக்கிலும் ஜெயில்தார் சிங் சேர்க்கப்பட்டார்.
ஆசிரியரான ஜெயில்தார் சிங், பவாரியா கும்பல் தலைவன் ஓம் பிரகாஷின் மருமகன். தமிழ்நாட்டில் கொள்ளையடித்துக் கொண்டு சென்று கொடுக்கும் நகைகளை விற்பனை செய்து, அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கும் வேலையை இவர்தான் செய்து வந்தார் என போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சுதர்சனம் கொலை வழக்கில் ஜெயில்தார் சிங் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications