சென்னையில் மது குடிக்க தண்ணீர் எடுத்து வர மறுத்தவர் காலால் மிதித்து கொலை.. ரவுடிக்கு ஆயுள் தண்டனை
சென்னை: கடந்த 2021ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மது குடிக்க தண்ணீர் எடுத்து வர மறுத்தவரை காலால் மிதித்து கொலை செய்துள்ளார் ரவுடி. அந்த ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்ன நடந்தது, நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சங்கர் கடந்த 2021ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே படுத்து துாங்கி உள்ளார். அப்போது, செல்வக்குமார் என்ற மஞ்சா செல்வக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மது குடிக்க வந்துள்ளனர்.

அப்போது, அங்கு துாங்கி கொண்டிருந்த சங்கரை எழுப்பிய செல்வகுமார் மது குடிக்க அருகில் இருந்த குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வரும்படி கூறியுள்ளார். அதற்கு சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், சங்கரின் முகத்தில் காலால் மிதித்து தரையில் அமுக்கி, செல்வகுமார் கொலை செய்துள்ளார். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 16 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.அபிரகாம் லிங்கன் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வகுமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications