ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்
சென்னை: பொங்கல், தீபாவளி என்றால் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். அதுபோலவே தற்போது சென்னை வரும் விமானங்களின் கட்டணமும் 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.
தனியார் டிரான்ஸ்போர்ட் என்றாலே இதுதான் பெரிய தலைவலி. ஆள் இல்லாத நேரத்தில் ஆஃபராக போட்டு தள்ளுவார்கள். பயணிகள் கூட்டம் வந்துவிட்டால் இதுதான் சான்ஸ் என்று, கட்டணத்தை ஒரேயடியாக ஏற்றிவிடுவார்கள். தற்போது ஏர்லைன் நிறுவனங்கள் இதைத்தான் செய்திருக்கின்றன.

என்ன நடந்தது?
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னையிலிருந்து வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளனர். இப்படி இருக்கையில்தான், சென்னைக்கு வரும் விமானங்களின் கட்டணம் எகிறியிருக்கிறது.
விமான கட்டணம்
வழக்கமான நாட்களில் மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு விமான கட்டணம் ரூ.5,800 ஆக இருக்கும். இப்போது பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால், கட்டணம் ரூ.17,500 அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல, சாதாரண நாட்களில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வர ரூ.6300 கட்டணமாக இருந்தது. இது தற்போது ரூ.17,300 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மட்டுமல்லாது, போதுமான அளவு இருக்கை இல்லாததால், மக்களால் பணம் கொடுத்தும் பயணிக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் டிக்கெட் கிடைப்பதில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.
பண்டிகை நாட்களில் விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், பள்ளி திறக்கும் நேரத்தில் இப்படி கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது.
ஏன் இந்த கட்டண உயர்வு?
விமான நிறுவனங்கள் 'டைமிங் பிரைசிங்' என்கிற கட்டண கொள்கையை பின்பற்றுகின்றன. அதாவது, விமானத்தில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை நிலையானது. கோடை விடுமுறை முடிவு, பண்டிகை காலங்கள் அல்லது அவசரக் காலங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் குறிப்பிட்ட ஒரு சில இருக்கைகளுக்காகப் போட்டியிடுகின்றனர்.
விமான நிறுவனங்களின் கொள்ளை
விமான நிறுவனங்களின் கம்ப்யூட்டர் மென்பொருள், தங்களின் இணையதளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகை மற்றும் தேடல்களின் எண்ணிக்கையை நொடிக்கு நொடி கண்காணித்துக் கொண்டே இருக்கும். தேவை அதிகமாக இருப்பதை அறிந்தவுடன், அது தானாகவே விலையை உயர்த்தத் தொடங்கிவிடும்.
விமான நிறுவனங்கள் ஒரு விமானத்தில் உள்ள அனைத்து எகானமி இருக்கைகளையும் ஒரே விலையில் விற்பதில்லை. அவசியத்திற்கு ஏற்ப அவற்றை வெவ்வேறு விலைப் பெட்டிகளாக பிரித்து வைப்பார்கள்.
அதிக விலை
உதாரணமாக, முதல் 20 இருக்கைகள் ₹4,000 என குறைந்த விலையிலும் , அடுத்த 30 இருக்கைகள் ₹7,000 என நடுத்தர விலையிலும் பிரிக்கப்படும். கடைசி நேர இருக்கைகள் ₹15,000 வரை மிக அதிக விலைக்கு விற்கப்படும்படி அல்காரிதம் வடிவமைக்கப்பட்டிருக்கும். முந்தைய பெட்டிகள் காலியாகக் காலியாக, தானாகவே அடுத்த அதிக விலை கொண்ட பெட்டியின் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரும். இதனால்தான் கோடை விடுமுறை முடிவு, பண்டிகை காலங்கள் அல்லது அவசரக் காலங்களில் விமான டிக்கெட்கள் அதிகரிக்கின்றன.












Click it and Unblock the Notifications