ஈர்த்த ஈசிஆர்.. பெருங்களத்தூர் ரோட்டில் கேஷூவலா நடந்து போன "விருந்தாளி".. மலைத்த சென்னைவாசிகள்.. ஆஹா
சென்னை: சென்னையின் புறநகர் சாலைகளில், முதலைகளின் வாக்கிங் இன்னமும் அடங்கவில்லை.. இதோ இப்போதும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தின்போது பெருங்களத்தூர் பகுதியில் குறிப்பாக, நெடுங்குன்றம் சாலையில் சுமார் 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று தென்பட்டது.

பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில், வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடந்த சென்றதை, அப்போது யாருமே இதை நம்பவில்லை.. பிறகுதான் இந்த செய்தி உண்மை என்று உறுதியானது. இத்தனைக்கும் அந்த நேரத்தில், பொதுமக்கள் பைக்கில் அதே சாலையில் சென்று கொண்டிருந்தனர்..
ஏரி குளம்: அங்குள்ள ஏரி பகுதிகளில் இருந்து முதலை தவறி சாலைப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று சொன்னார்கள்.. ஆனால், அந்த முதலை ரோடு கிராஸ் செய்து, அந்த பகுதியிலிருக்கும் தண்ணீருக்குள் சென்றுவிட்டது. அதற்குபிறகு வெளியே வரவில்லை.
இதுதொடர்பாக வனத்துறை செயலாளர் சொன்னபோது, "சென்னையில் இருக்கும் பல்வேறு நீர் ஆதாரங்களில் ஏற்கனவே நிறைய முதலைகள் இருந்து வருகின்றன. இப்போது புயல் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு முதலை சாலைக்கு வந்துள்ளது. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. அந்த முதலை தண்ணீருக்குள் சென்றுவிட்டது.. மீண்டும் முதலை சாலைகளுக்கு வர வாய்ப்பில்லை" கூறி இருந்தார்.
பெருங்களத்தூர்: இது சென்னைவாசிகளுக்கு தைரியம் தந்திருந்தது என்றாலும், இதற்கு பிறகு, ஆலப்பாக்கத்தில் மறுபடியும் ஒரு பெரிய முதலை பிடிபட்டநிலையில், இன்னொரு முதலை அதே பெருங்களத்தூர் ரூட்டில் தற்போது சிக்கி உள்ளது.. இது முதலையின் குட்டி போல உள்ளது.. பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இது என்கிறார்கள்..
பெருங்களத்தூர் ரோட்டில் இந்த முதலை குட்டி சாலையிலேயே நடந்து சென்றிருக்கிறது.. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள், உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.. வனத்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து பெருங்களத்தூர் ரோட்டுக்கு விரைந்து வந்தனர்..
முதலைக்குட்டி: அப்போது, சாலை ஓரத்தில், முட்புதரில் அந்த முதலைக்குட்டி பதுங்கியிருந்ததாம்.. கிட்டத்தட்ட 8 ஒன்றரை அடி நீளத்துக்கு இந்த குட்டி இருந்துள்ளது.. பிறகு வனத்துறையினர், அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து, கிண்டி பூங்காவிற்கு கொண்டு சென்றார்கள்.
உணவு டெலிவரி: நேற்றிரவு உணவு டெலிவரி செய்யும் ஒருவர் பைக்கில் வந்திருக்கிறார்.. அவர்தான் முதலில், முதலையை பார்த்துள்ளார்.. உடனே பைக்கை நிறுத்தி, செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறார். இணையத்தில் இந்த வீடியோ வைரலானதையடுத்து, முதலை எப்படி சாலைக்கு வந்தது? என்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். பிறகுதான் வனத்துறையினருக்கு விஷயம் தெரிந்து வந்து பிடித்து சென்றுள்ளனர்.
ஏரி, குளங்கள் மழையால் நிரம்பியபோது அங்கிருந்து வெளியேறிய முதலைகள் இப்போது, நீர் வற்றியதால் ஆங்காங்கே சுற்றித் திரிவதாக வனத்துறையினர் சொன்னாலும், சென்னைவாசிகளுக்கு பீதி இருக்கத்தான் செய்கிறது.












Click it and Unblock the Notifications