வெள்ளமே இன்னும் முழுசா வடியல.. களத்தில் குதித்த "குடி"மகன்கள்! சென்னை டாஸ்மாக்கில் குவியுது கூட்டம்
சென்னை: புயல் பாதிப்பில் இருந்து சென்னை இப்போது தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டது.
தலைநகர் சென்னையை மிக்ஜாம் புயல் மொத்தமாக புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த ஞாயிறு இரவு முதல் கொட்டிய கனமழை சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களை மொத்தமாக காலி செய்துவிட்டது.

இந்த மிக்ஜாம் புயல் சென்னை அருகே கரையை கடக்கவில்லை என்ற போதிலும், இது சென்னை அருகே வந்த போது தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், அது சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடியது.
புரட்டிப்போட்ட வெள்ளம்: சென்னையில் முக்கிய சாலைகளில் மறுநாளே நீர் வடிந்துவிட்டது. இதனால் ஒரு பகுதி சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதேநேரம் மறுபுறம் இன்னும் சில இடங்களில் இன்னுமே நீர் வடியவில்லை. மேலும், அத்தியவசிய பொருட்களான பால் உள்ளிட்ட பொருட்களுக்கு இன்னுமே தட்டுப்பாடும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இன்னுமே மழை நீர் தேங்கி இருக்கிறது. அதை மோட்டார் மூலம் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறனர். மறுபுறம் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்த கனமழை காலத்தில் அத்தியவசிய பொருட்களை பெறுவதிலேயே மிக பெரிய சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக திங்கள் செவ்வாய் தினங்களில் பால் வாங்குவதில் கூட சிரமம் ஏற்பட்டது. இதனால் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பத்தினர் பெரும் துயரத்தை எதிர்கொண்டனர். நேற்று புதன்கிழமை நிலைமை சற்று சீரானாலும் கூட பால் வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருந்தது.
அதேநேரம் நேற்றைய தினம் நகரில் பல பகுகிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. ஆனால், அது பால், பிரட் என அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் இல்லை. மதுபானங்களை வாங்க டாஸ்மாக் முன்பு குவிந்த கூட்டமாகும். கனமழை காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. நேற்று தான் அவை திறக்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே மது வாங்க குவிந்தனர். பல இடங்களில் பொறுமையாக வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் வீடியோக்களும் கூட இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதேநேரம் பொதுமக்களுக்கு அத்தியவசிய பொருட்கள் கிடைப்பதிலேயே சிக்கல் நிலவி வரும் நிலையில், இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது அவசியம் தானா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே புயல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கையில் இருக்கும் கொஞ்ச காசையும் மதுவுக்கு செலவு செய்துவிட்டால் ஏழை குடும்பங்கள் என்ன செய்வார்கள் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் சில பகுதிகளில் மழை நீர் வடியவில்லை.. குடிநீர், உணவு கிடைப்பதே சிக்கல் நிலவி வருகிறது.. இப்படியொரு சூழலில் அதற்கு முன்னுரிமை கொடுக்காமல் டாஸ்மாக் கடைகளுக்கு முனனுரிமை கொடுப்பது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications