காதலன் இறந்ததால் காதலியும் தற்கொலை.. வாட்ஸ்அப் வீடியோவால் வடசென்னையில் சோகம்
சென்னை: தூக்குபோட்டு உயிரிழந்த காதலன், தற்கொலை செய்யும் முன் அனுப்பிய வாட்ஸ் அப் வீடியோவை பார்த்து காதலியும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை காசிமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயபுரம், பனைமரத்தொட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத். காசிமேடு பகுதியைச் பெண்ணுடன் பழகி உள்ளார். இருவருக்கும் இடையே படிக்கும் காலத்தில் ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியுள்ளது. இந்த ஜோடி இரண்டு வருடங்களாக உருகி உருகி காதலித்து வந்துள்ளது.
வேலூரில் மீண்டும் வருமான வரித்துறை முற்றுகை.. திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை.. அடுத்து என்ன?
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வருத்தம் அடைந்த பிரேம்நாத் காதலிக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 8-ம் தேதி வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தான் தற்கொலை செய்யப் போவதாகவும், நாம் இருவரும் பிரிந்துவிடுவோம் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது காதலி பிரேம்நாத்தை செல்போனில் அழைத்து தடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்திருக்கிறது. இதற்கிடையே கொஞ்ச நேரத்தில் பிரேம்நாத் தற்கொலை செய்து கொண்ட தகவல், அவரது காதலிக்கு எட்டி உள்ளது. இதனால் கதறி அழுது துக்கத்தில் இருந்த அவர், 9-ம் தேதி இரவு 9.30 மணிக்கு மூன்றாவது மாடிக்குச் சென்று கீழே குதித்துள்ளார். தலையில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை, மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடியின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டிவிட்டனர், இந்நிலையில் சிறிய மனஸ்தாபத்தில் பிரேம்நாத் எடுத்த முடிவால் காதல் ஜோடிகள் உயிரை விட்டுவிட்டார்கள்.