சென்னைக்கு வந்துவிட்டது புதிய மேப்.. ஆனால் இது கொஞ்சம் விவகாரமானது.. ரொம்ப உஷாரா இருங்க!
சென்னை: சென்னையில் நடக்கும் குற்றச்செயல்களை வைத்து கிரைம் மேப் ஒன்றை மாநகர போலீசார் உருவாக்கி உள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சைபர் குற்றங்கள், மோசடிகள், சமூக வலைத்தளங்களில் நடக்கும் ஏமாற்று வேலைகள் என்று சமூக வலைத்தளங்களில் நிறைய குற்றங்களும் நடந்து வருகின்றன.
இது போன்ற குற்றங்களை தடுக்க நிறைய திட்டங்களை தமிழ்நாடு போலீஸ், சென்னை மாநகர போலீஸ் வகுத்து வருகிறது. இளம் வயதிலேயே சிறார்களை நல் வழிப்படுத்த வேண்டும், சைபர் குற்றங்களை கண்காணிக்க வேண்டும் போன்ற முக்கிய பணிகளை செய்து வருகின்றனர்.

சென்னை சைபர் பிரிவு தவிர்த்து இன்னும் 4 பெரிய நகரங்களில் போலீஸ் நிலையங்களை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய கருவிகள், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் குற்றங்களை தடுக்க சமூக வலைத்தளங்களையும் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர் . தவறான போஸ்டுகள், சோஷியல் மீடியா குற்றங்களை மேற்கொள்ளும் ஐடிக்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.
டிஜிட்டல் கிரைம் மேப்: இந்த நிலையில்தான் சென்னையில் நடக்கும் குற்றச்செயல்களை வைத்து கிரைம் மேப் ஒன்றை மாநகர போலீசார் உருவாக்கி உள்ளனர்.
பல்வேறு மண்டலங்களில் நடக்கும் குற்றங்களின் அடர்த்தியைக் குறிக்கும் வகையில், நகரின் டிஜிட்டல் குற்ற வரைபடத்தை போலீசார் வரைந்துள்ளனர். 2016 மற்றும் 2022 க்கு இடையில் நடந்த அனைத்து கடுமையான குற்றங்களும் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள், மத இடங்கள், விபத்து, சிசிடிவி கேமராக்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கூட இந்த மேப்பிற்கு கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
கொலைகள், கொள்ளைகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உட்பட 60,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் காவல்துறை தரவு வங்கியில் உள்ளன. அது ஒவ்வொரு நாளும் தினமும் நடக்கும் குற்றங்கள் அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது. அனைத்து 102 காவல் நிலையங்களில் இருந்தும் குறைந்தது 385 காவலர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து ஆறு மாதங்கள் களத்தில் செலவிட்டு இந்த மேப்பை உருவாக்கி உள்ளனர்.
இதற்காக 6.5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. மேப் மை இந்தியா என்ற நிறுவனத்திடம் இ-டெண்டர் முறையில் இந்த திட்டம் டெண்டர் விடப்பட்டு மேப் பெறப்பட்டு உள்ளது. நகரில் நடக்கும் குற்றங்களின் முறை மற்றும் போக்கை ஆய்வு செய்ய இது எங்களுக்கு உதவியாக இருக்கும், என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எங்கெல்லாம் அதிக அளவில் கிரைம் நடக்கிறது என்று போலீசார் எளிதாக கண்டுபிடிக்க முடியும். குற்றம் நடக்கும் இடங்களுக்கான தரவுகளை வைத்து இங்குதான் அதிக பாதுகாப்பு தேவை என்று முடிவு எடுக்க முடிவு எடுக்க முடியும். அந்த வகையில் அவசர அழைப்புகளுக்குப் பதிலளிக்க, சிறப்பு மொபைல் பயன்பாடுகள் மூலம் 5,000 ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் மற்றும் 2,000 பீட் போலீஸ் பணியாளர்களை ஆதரிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஒருங்கிணைந்த பீட் திட்டமிடல் மற்றும் தானியங்கி வாகன இருப்பிட அமைப்பு (AVLS) ஆகியவை இந்த குற்றம் அதிகம் நடக்கும் பகுதிகளில் களமிறக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications