சென்னையில் இப்படியுமா வீட்டுக்கடனை அடைக்க முடியும்.. குணமாக சொன்ன குணசேகரன்.. ஆடிப்போன போலீஸ்
சென்னை: வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க பலர் பல வழிகளில் உழைத்து கடனை அடைப்பார்கள். சென்னையை அடுத்த மாங்காட்டில் இளைஞர் ஒருவர் கடனை அடைக்க வித்தியாசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தற்போது அவர் கம்பி எண்ணி வருகிறார். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் செய்த குணமான காரியம் பற்றி கூறிய வாக்குமூலத்தை பார்ப்போம்.
சென்னையின் புறநகர் பகுதியான மாங்காடு பகுதி என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் தாலுகாவில் உள்ள நகராட்சியாகும். பூந்தமல்லியில் இருந்து மிகவும் அருகில் உள்ளது. இங்கு கடந்த நவம்பர் மாதம் இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதி சென்று கொண்டிருந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் செல்லும்போது பைக்கில் வந்த மர்ம நபர், தம்பதியை நெருங்கி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில், பெண் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு சென்றார்.

இது குறித்து அளித்த புகாரின் பேரில் போரூர் உதவி கமிஷனர் கலியசுந்தரம், மாங்காடு இன்ஸ்பெக்டர் கொடிராஜ் தலைமையிலான போலீசார் க கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.சுமார் 350க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பொதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திருட்டுசெயலில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் வீட்டிற்குள் போவதற்குள் போலீஸ் அவர்களது வீட்டை கண்டுபிடித்துவிட முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, தொழில்நுட்பரீதியாகவும் இணைக்கப்பட்டுள்ளன. உட்கார்ந்த இடத்தில் இருந்தே திருடர்களை சென்னையில் எந்த மூலையில் இருந்தாலும் தூக்கிவிட முடியும்.
அந்த வகையில் மாங்காடு அருகே நகை பறிப்பில் ஈடுபட்டது ஆவடியை அடுத்த பட்டாபிராம், கரிமேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் (33) என்பது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பட்டப்படிப்பு முடித்த இளைஞரான குணசேகரன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவர் கடனை வாங்கி வீட்டை கட்டியிருக்கிறார். வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூப் பார்த்து நகை பறிப்பில் எப்படி எல்லாம் ஈடுபடலாம் என்று பார்த்துவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் நேரத்தில் நகை பறிப்பில் ஈடுபடுவதும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக நம்பர் பிளேட்டை மறைத்து வாகனத்தை ஓட்டியதும் பறித்த நகைகளை விற்று கடனை அடைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் பிடிக்க வரும்போது அவரிடம் குணமாக பேசிய குணசேகரன், தான் செய்தது தவறுதான். என்றாவது ஒருநாள் போலீசாரிடம் சிக்கி கொள்வேன் என்று தெரிந்துதான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டேன் எனறு வாக்குமூலம் அளித்திருக்கிறாராம். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து நன்றாக படித்து வேலையில் இருந்த குணசேகரன் நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பணம் வேண்டும். குறுகிய காலத்தில் கடனை அடைக்க வேண்டும் என்று திருடிய குணசேகரனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications