விதி மீறி வந்த லாரியால் விபரீதம். சென்னையில் கல்லூரி மாணவி தலை துண்டாகி பலி.. கணவன் கண் முன் சோகம்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் பிஎஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி, அடையாறில் லாரி மோதிய விபத்தில் தலை துண்டாகி பலியானார். கணவன் கண் எதிரே மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு . இவரது மனைவி ஹேமலதாவுக்கு 25 வயது ஆகிறது. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஹேமலதா கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் பி.எஸ்சி. படிப்பில் கடந்த ஆண்டு சேர்ந்துள்ளார். தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திருமணம் நடந்த போதும் படிப்பின் மீதான ஆர்வம் காரணமாக கல்லுரி படிப்பை அவர் தொடர்ந்துள்ளார்.

கணவர் ரகு, மனைவி ஹேமலதாவின் படிப்பிற்கு உறுதுணையாக இருந்துள்ளார். தினமும் ரகு தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்து சென்று வந்தள்ளார்.
அப்படித்தான் நேற்று காலையிலும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மனைவி ஹேமலதாவை தரமணியில் இருந்து கிண்டி நோக்கி அழைத்து சென்றுள்ளார். ரகு, மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று காலை 8.45 மணியளவில் அடையாறு பகுதியில் மிகக்குறுகிய சாலையில் சென்றுள்ளார். அப்போது, திருவான்மியூரில் இருந்து அடையாறு நோக்கி சிமெண்டு கலவை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி ரகு மற்றும் ஹேமலதா ஆகியோர் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கர வேகமாக மோதியது.
இதில், நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்த ரகு சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டார். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த ஹேமலதா சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த டிப்பர் லாரி ஹேமலதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஹேமலதா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது கணவர் சாலையின் ஓரத்தில் விழுந்ததால் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஹேமலதா தனது கண்முன் துடிதுடித்து இறந்ததை பார்த்து ரகு கதறி அழுதார். சில நொடிகளில நடந்து முடிந்த இடந்த கொடூர சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து உடனடியாக அடையாறு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரகுவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் போலீசார் ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவா் ஆசாத் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நடந்த இந்த மோசமான விபத்திற்கு முக்கிய காரணம், விதிமீறல் என்று கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை காலை 7 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் நகருக்குள் இயங்க முடியும். ஆனால் உண்மையில் அப்படி இருப்பது இல்லை என்று புகார் உள்ளது. காலையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் நேரங்களில் தான் அதிக அளவு கனரக வாகனங்கள் செனனை நகருக்குள் சுற்றுகின்றன. அப்படித்தான் டிப்பர் லாரி விதிமீறி வந்துள்ளது. அந்த லாரி தான் ஹேமலதாவின் உயிரை பறித்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விதிகளை மீறி சென்னை நகருக்குள் வரும் டிப்பர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகத்திலும், தாருமாறாகவும் வருவதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை அவர்கள் இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. எனவே சென்னை போக்குவரத்து போலீசார், விதிகளை மீறும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது












Click it and Unblock the Notifications