அதிர்ச்சி!.. ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா.. சென்னையில் கிடுகிடு உயர்வுக்கு காரணம் என்ன?
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் மாலை நேரங்களில் கொரோனா தொற்று குறித்த எண்ணிக்கையை மீடியா புல்லட்டினில் அரசு கொடுத்து வருகிறது. அதன்படி இன்று வெளியான நிலவரத்தில் சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1257 ஆக உயர்ந்துள்ளது. இது பெரும் கவலையை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா தொற்று... ஒருவர் உயிரிழப்பு
ஆண் குழந்தைகள்
தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் குழந்தைகள் 83 பேரும் பெண் குழந்தைகள் 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 13 முதல் 60-வயதுக்குட்பட்டவர்கள் வரை 1554 ஆண்களும், 763 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 89 பெண்களும், 191 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரச்சினை
எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. வடசென்னையில் சமூக விலகலை கடைப்பிடிக்காததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி
ஞாயிற்றுக்கிழமை அன்று மீன் சந்தை, வீட்டு விலங்குகள் விற்பனை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகளில் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டமாக கூடுவது பெரும் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வீடுகளும் சிறிது சிறிதாக இருக்கிறது. இதனால் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருக்கின்றனர்.
சென்னை
மேலும் தற்போது தொழில்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் வடசென்னையில் வீடுகளில் சீட்டாடும் பழக்கம் இருப்பதாக தகவல்கள் உள்ளன. எனவே வீடுகள் நெருக்கமாக இருப்பதும் கொரோனா பரவலுக்கு ஒரு காரணமாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்பது இனிதான் மாநகராட்சி வெளியிடும்.