விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறக்க சென்னை ஹைகோர்ட் அனுமதி.. காவல் துறைக்கும் ஒரு உத்தரவு
சென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மூடப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோவிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், பூஜாரியை தவிர கோவிலுக்குள் எவரையும் அனுமதிக்க கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர்.
அரசு தலைமை வழக்கறிஞர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.
அதேபோல, தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பூஜைகளுக்காக கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
கோவிலில் பூஜைகள் செய்ய பூஜாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்து, விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications