பாமகவின் மதுவிலக்கு பிரசாரத்திற்கு ஏன் அனுமதி மறுப்பு! ஆளுங்கட்சிக்காகவா காவல்துறை? நீதிபதி சரமாரி
சென்னை: தமிழக காவல் துறை ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் அனுமதி வழங்குவார்களா என்றும் அது யாருடைய ஏஜென்சி என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக தொடர்ந்து மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு, இலவச தரமான கல்வி, இலவச தரமான மருத்துவம் ஆகியவை வழங்கப்படும் என்கிறார்கள்.

இலவச கல்வியும் மருத்துவமும் மற்ற ஆட்சிகளிலும் இருந்தாலும் அதில் பாகுபாடுகள் இருப்பதாக பாமக குற்றம்சாட்டுகிறது. அனைவருக்கும் சரிசமமான கல்வியும் மருத்துவமும் கிடைத்துவிட்டால் மற்ற பொருள்களை இலவசமாக வழங்க தேவையில்லை என்பதுதான் பாமகவின் செயல்திட்டமாக இருக்கிறது.
தமிழகத்தில் போதை, மது, கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறும் பாமக, பாமகவின் கொள்கை குறித்து பிரச்சாரம் செய்ய மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த ராணிப்பேட்டை காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து, ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும் போது, மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும் தான் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
யாருக்காக காவல் துறையினர் உள்ளனர்? பொது மக்களுக்காகவா? ஆளுங்கட்சியினருக்காகவா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் அவர், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும் போது, தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
ஒரு வேளை யாருக்கேனும் அனுமதி வழங்கியிருந்தால் டிஎஸ்பி நேரில் ஆஜராக சொல்லி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் மாதம் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications