எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது ஏன்?- உயர்நீதிமன்றம் கேள்வி
Recommended Video
சென்னை: எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை முறையாக பரிசோதனை செய்யாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையிலிருந்து தானமாக பெறப்பட்ட எச்ஐவி பாதிப்புள்ள ரத்தம் சாத்தூர் மருத்துவமனையில் அவருக்கு ஏற்றப்பட்டது.
இதனால் அந்த பெண்ணுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க ரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியம் என கூறி 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த கர்ப்பிணிக்கு அரசு சார்பில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர் நீலமேகன் என்பவர் மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்தது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வு கூறுகையில் ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது ஏன்.
கர்ப்பிணிக்கான சிகிச்சை, சிசுவுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எடுக்கும் நடவடிக்கை என்ன என்பது குறித்து ஜனவரி 3-ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.