மார்க் ஆண்டனி படம் ரிலீஸாகிடுச்சே! லைகா கடனை திருப்பி செலுத்தாதது ஏன்? விஷாலுக்கு நீதிபதி சரமாரி
நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ள நீதிபதி பி.டி.ஆஷா முன்பே பட்டியலிடும்படி உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.
தனது 'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வும் உறுதிசெய்திருந்தது.
இந்த நிலையில். வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்து, படம் வெளியான பிறகும் கடனை ஏன் இன்னும் திருப்பி செலுத்தாமல் இருக்கிறார் என விஷால் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்
விஷால் தரப்பில் வழக்கறிஞர் சிதம்பரம் ஆஜராகி, நடிகர் விஷால் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த லைகா தரப்பு மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, இரு நீதிபதிகளின் உத்தரவு மாற்றியமைக்கப்படவில்லை எனவும், இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் உத்தரவுகளை பிறப்பித்துள்ள நீதிபதி பி.டி.ஆஷா விசாரிப்பதே சரியாக இருக்கும் என தெரிவித்த நிலையில், நடிகர் விஷால் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா முன்பே மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத் துறைக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications