டான்சி ஓய்வூதியதாரர்களுக்கு 6ஆவது ஊதியக் குழுவின் பணிக் கொடை! வழக்கை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்
சென்னை: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் உயர்த்தப்பட்ட பணிக் கொடையை, டான்சி நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கு 2006-ம் ஆண்டு முதல் வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு 2009ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த ஊதிய உயர்வு, பணிக்கொடை உயர்வுகள், அரசுக்கு சொந்தமான நிறுவன ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு சிறுதொழில் கழகமான டான்சி நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கான பணிக்கொடை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்பது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது 2010ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து டான்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 34 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் பணிக்கொடை உயர்வு அரசு ஊழியர்களுக்கு 2006 முதல் அமல்படுத்தப்படும் நிலையில், டான்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 2010 முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது பாரபட்சமானது என்பதால், உயர்த்தப்பட்ட பணிக்கொடையை 2006ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், பணிக்கொடைச் சட்டப்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட பணிக்கொடை 2010ம் ஆண்டு முதல் பெற உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, டான்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications