சொத்து மறைப்பு.. ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பிப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு.. 4 நாள்தான் இருக்கிறது.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மகன் ப.ரவீந்திரநாத் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சொத்து விவரங்களை மறைத்ததாக...
தேர்தலுக்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாக கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தேனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்தில் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிப்ரவரி 7-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், ஓ.ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் மனு
சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனுவில் அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் காவல்துறையினர் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதால் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
இந்த வழக்கில் காவல் துறைதுறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இந்த மனு தொடர்பாக காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 1-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகியோரை சற்று நிம்மதியடைய செய்துள்ளது.