பாஸி நிதி நிறுவன வழக்கு...ஐஜிக்கு சிக்கல்...சிபிஐக்கு வழக்கை மாற்றியதை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
சென்னை: பாஸி நிதி நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கையும், நிதிநிறுவன பெண் இயக்குனரிடம் 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அப்போதைய ஐஜி பிரமோத்குமார் உள்ளிட்ட போலீசார் மீதான வழக்கையும் சி.பி.ஐ-க்கு மாற்றியது சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த பாஸி நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் கே.மோகன்ராஜ், கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோருக்கு எதிராக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண் இயக்குனர் குற்றச்சாட்டு
இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் இயக்குனர் கமலவள்ளி கடத்தப்பட்டதாக அவரது டிரைவர் புகார் அளித்தார். சில நாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறிஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் வி.மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோர் தன்னிடம் இருந்து 2 கோடியே 95 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் தெரிவித்தார்.

சி.பி.சி.ஐடி போலீஸ்
இந்த புகார் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை, வேலூர் சி.பி.சி.ஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ஆய்வாளர் வி.மோகன்ராஜ், அப்போதைய மேற்குமண்டல ஐ.ஜி பிரமோத்குமாரின் அறிவுறுத்தல்படி இந்த சம்பவத்தில் தலையிட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்
அதன் அடிப்படையில் பிரமோத்குமாரிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நிதிநிறுவன மோசடி வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, லோகநாதன் என்ற முதலீட்டாளரும், பாஸி நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கமும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கையும், போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குகளை விசாரித்து கோவை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதால், வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு தடை விதிக்க கோரி ஐஜி பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீண்டும் விசாரணை
அதை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், மனுக்களை மீண்டும் விசாரித்து, அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளித்து பிரச்னைக்கு தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியது.

தனி நீதிபதி உத்தரவிட்டது சரிதான்
இந்த நிலையில் இந்த வழக்கில் அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நிதி நிறுவனம் பல்வேறு நாடுகளில் கம்பெனி துவங்கி நடத்தி வந்ததால், இந்த குற்ற வழக்கை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சரி என்றும் கூறியுள்ளார்.

உறுதி செய்தார்
மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட பிறகும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காததும், ஐஜி பிரமோத் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால் சிபிஐ விசாரிக்க தகுதியான வழக்கு எனவும் கூறி, இரு வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றிய உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

ஐஜி ப்ரமோத் குமாரின் நிலை
ஐ.ஜி பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் வழக்கு விசாரணையை தொடர சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். ஐஜி ப்ரமோத் குமார் இந்த வழக்கு காரணமாக சர்வீஸிலிருந்து விடுவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார். அவரது பேட்ச் அதிகாரிகள் அனைவரும் தற்போது டிஜிபிக்களாக ப்ரமோஷன் பெற்ற நிலையில் வழக்கில் சிக்கியதன் காரணமாக ஏடிஜிபி, டிஜிபி ப்ரமோஷன் அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications