கொரோனா தடுப்பு பணியில்.. தமிழக அரசின் நடவடிக்கை திருப்தியளிக்கிறது.. சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை: கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தகவல்
அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தடுப்பூசி மற்றும் மருந்து ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோய்க்கான லைசோசோமால் மருந்து ஒதுக்கீடு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு அறிக்கை
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீடு தவிர்த்து, சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறியது. நர்சிங் மாணவிகளும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

உத்தரவிட வேண்டும்
இதனை இந்த வழக்கில் இணைத்துக் கொண்ட வழக்கறிஞர்கள் கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் நிலவுகிறது. மனநல காப்பகங்களில் உள்ளவர்களுக்கும் கொரோனா சிகிச்சை வழங்க வேண்டும். கொரோனா பாதித்து பலியானவர்களின் உடல்களை முழுவதுமாக மூடி விடுவதால் உறவினர்களால் அவர்களின் முகத்தை பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் முகம் மட்டும் தெரியும் வகையில் கொடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

நீதிமன்றம் அரசை நடத்த முடியாது
இதனை தொடர்ந்து தமிழக அரசின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் ,அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை திருப்தியளிப்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கை பொறுத்தவரை தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாகவே செயல்படுவதாகவும், நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியல்ல என்றும் நீதிமன்றம் அரசை நடத்த முடியாது என்றும் கூறினார்கள்.

வருத்தமளிக்கிறது
பின்னர் கொரோனாவில் பலியானவர்களின் உடலுக்கு அடக்கம் செய்வதற்கு முன்பு உறவினர்கள் இறுதியாக பார்ப்பதற்கும், உடலை அடையாளம் காண்பதற்கும் ஏதுவாக முகம் மட்டும் தெரியும் வகையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குறைந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுவைக்கு அறிவுரை
தமிழகத்தை சேர்ந்த அதிகமானோர் ஊரடங்கை மீறி புதுச்சேரிக்குள் நுழைகின்றனர் என்றும் புதுச்சேரி ஆரோவில் உள்ளே இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வருகிறது. புதுச்சேரி அரசு இதனை கவனத்தில் கொண்டு செயல்பட நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை மே 31-ம் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications