ராஜேந்திரபாலாஜி வழக்கு! தமிழக காவல்துறைக்கு நேரமில்லையா? உச்சநீதிமன்றம் போங்க! நீதிபதி அதிருப்தி
சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
முந்தைய அதிமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. உத்தரவு அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஏற்கெனவே குற்றபத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் காவல் துறை செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த காவல் துறைக்கு நேரமில்லை, இனி சிபிஐ பார்த்து கொள்ளட்டும். ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்துவிடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications