2 நாளா அனலை கிளப்பிய சேலம் துணை வேந்தர் ஜெகநாதன் கேஸ்.. ஹைகோர்ட்டில் நடந்த பரபரப்பு வாதம் இதோ!
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் செயல்பாடு எந்தவித குற்றநோக்கத்துடன் இருப்பதாக தெரியவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகக் கூறி பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, துணைவேந்தர் ஜெகநாதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஓய்வுபெற்ற பின் லாபமடையும் நோக்கில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2013 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, லாப நோக்கில்லாமல், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்தை துவங்கவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவும் அரசும் அனுமதியளித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்துக்கும், மாணவர்களுக்கும் மட்டும் பயன் தரக் கூடிய இதுபோன்ற நிறுவனம், பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் லாப நோக்கு இல்லா நிறுவனம் என்பதால் ஊழல் எங்கு நடைபெற்றது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுவரை நடத்திய விசாரணையில் என்ன தெரிய வந்தது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் தமிழகத்தில் ஒன்பது பல்கலைக்கழகங்களில் 2013ல் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த தலா 14.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2023ல் அரசு மற்றும் சிண்டிகேட்டிடம் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழக பெயரில், முகவரியில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழகத்தின் 2024 சதுர அடி நிலத்தை எந்த அனுமதியுமில்லாமல் பயன்படுத்தியுள்ளனர். அரசு அனுமதியின்றி ஐ.டி.டி சி என்ற பெயரை பியூட்டர் என பெயர் மாற்றம் செய்து, நான்கு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தங்களில் பணம் பரிமாறப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருவதாகவும் விளக்கமளித்தார்.
அப்போது, புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி தலையிட முடியும். பணபரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என, ஜெகநாதன் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்புனார்.
அதற்கு பதிலளித்த ஜெகநாதன் தரப்பு வழக்கறிஞர், 2013ல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதும், இன்னும் அந்த நிறுவனம் செயல்பட துவங்கவில்லை.
2023ல் பெயர் மாற்றம், நிலம் ஒதுக்கிடு தொடர்பாகவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய பல்கலை சிண்டிகேட்டில் அனுமதி கோரப்பட்டது. அனைத்தும் பொது வெளியில் உள்ளது. ஒரு ரூபாய் கூட பரிமாறவில்லை. உயர் கல்வித்துறை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் காவல் துறை தலையிட முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கில் ஜெகநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்த மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதை எதிர்த்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அனைத்து ஒப்பந்தங்களும் கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறிய நீதிபதி, விசாரணையை நாளை தள்ளிவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன்வைக்க இருப்பதால் இருப்பதால் வழக்கின் விசாரணையை சற்றுநேரம் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து விட்டதாகவும், அதிலிருந்து ஜெகநாதனின் செயல்பாடு எந்தவித குற்றநோக்கத்துடன் இருப்பதாக தெரியவில்லை என கூறி, காவல்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
ஆனால் விசாரணைக்கு தடைவிதிக்கக் கூடாது என காவல்துறை தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என கூறி, வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications