Chinnathambi: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பியை பிடிக்க உத்தரவு.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்த விநாயகன் மற்றும் சின்னத்தம்பி என பெயரிடப்பட்ட இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் பிடித்து முதுமலை மற்றும் வரகழியாறு வனப்பகுதிகளில் விட்டுள்ளனர்.

யானை
இதில் சின்னத்தம்பி யானை தற்போது 100 கி.மீட்டர்களுக்கும் மேலாக பயணித்து, திண்டுக்கல் மாவட்டத்தை நெருங்கி வருகிறது. உடுமலைப்பேட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் இந்த யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கும்கியாக மாற்றக் கூடாது
இதுதொடர்பாக கடந்த 4-ஆம் தேதி வன ஆர்வலர்களான முரளிதரன், அருண் பிரசன்னா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வனத்துறை
இதைத் தொடர்ந்து இந்த வழக்கானது 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்படுகிறது.

துன்புறுத்தல்
அந்த யானையை நிரந்தரமாக முகாமில் வைப்பதா, காட்டுக்குள் விடுவதா என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதுகுறித்த இறுதி முடிவை தலைமை வனப் பாதுகாவலர் எடுக்க வேண்டும். சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications