மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி! சிஎம்ஆர்எல்லுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் மேற்கூரை அமைக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் மிகவும் சிறிய அளவில் இருப்பதால் வாகனம் நிறுத்த வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், மேற்கூரை வசதி இல்லாததால் வாகனங்கள் வெயில் மழையில் நனைந்து பாழாய்ப் போவதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த ஞானேஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், போதிய அளவில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லாததால் வாகனங்கள் திருடு போகும் சம்பவம் நிகழ்வதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜூன் மாதம் அளித்த மனு மீது மெட்ரோ நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வு, மனுதாரரின் விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications