நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மார்ச் 7ல் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால் தான், பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என கடிதம் அனுப்பிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை வரும் 7ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய குழந்தைவேல் உள்ளிட்டோர், பணி உயர்வு கோரி கடந்த 2013 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், பணி மூப்பு அடிப்படையில், பதவி உயர்வையும் அதற்கான பணப்பலன்களையும் வழங்க நீதிமன்றம் கடந்த 2017 உத்தரவிட்டது
இந்த உத்தரவை சேலம் பெரியார் பல்கலைகழகம் நிறைவேற்றவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடேயே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற்றால் தான், பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியலில் பெயர்களை சேர்க்க முடியும் என பல்கலைகழக பதிவாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.
எந்த வற்புறுத்தலும் இல்லாமல் இந்த பதவி உயர்வு பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என குழந்தைவேலு உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இது தொடர்பாக பெரியார் பல்கலைகழக பதிவாளர் வரும் மார்ச் 7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications