விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை, விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை கைது செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் மேல் விசாரணை மேற்கொண்டுள்ள காவல் துறையினர், அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை செய்தனர். மந்தைவெளி வீடு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து, தனக்கு முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயர் இல்லை என்றும், புகார்தாரர்களும் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை எனவும் விதிகளை பின்பற்றாமல், தன்னை கைது செய்ய காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டி வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், மேல் விசாரணையில் 238 பேர் பணம் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ள சென்ற அதிகாரிகளை அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும், அந்த ஆய்வின் முடிவில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி செந்தில் பாலாஜி தான் என உறுதிப்படுத்தும் வகையில் பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்திய நீதிபதி, அதுவரை அவரை கைது செய்ய கூடாது என தெரிவித்து, விசாரணையை பிப் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications