அமர்பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் கைதாகிறாரா? மனைவி வழக்கில் தாம்பரம் கமிஷனர் விளக்கம்!
சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் தற்போது இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாம்பரம் காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் கொடிக் கம்பம் 50 அடி உயரத்தில் நடப்பட்டது. இது விதிகளுக்கு புறம்பானது என கூறிய போலீஸார் இந்த கொடி கம்பத்தை அகற்றினர்.

அப்போது பாஜகவினர் அண்ணாமலை வீடு முன்பு ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவரான அமர்பிரசாத் ரெட்டியும் போராட்டம் நடத்தினார். அப்போது கொடி கம்பத்தை காவல் துறையினர் அகற்றியதால் அவர்கள் மீது தாக்குதல், ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தது போன்ற வழக்குகளின் கீழ் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் போது தமிழ்நாடு அரசின் விளம்பரங்களை சேதப்படுத்தி அதில் பிரதமர் மோடி படத்தை ஒட்டியதாக சென்னை கோட்டூர்புரம் போலீஸார் பதிவு செய்த வழக்கு அமர் பிரசாத் ரெட்டி மீது பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இதனிடையே ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இது தவிர அவர் மீது மோசடி குற்றச்சாட்டுகளும் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்ட தன் கணவர் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் துறை திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி நிரோஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
தமிழக அரசின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால் என் கணவர் மீது பொய் வழக்கு போட்டு சட்டவிரோதமாக கைது செய்துள்ளார்கள். போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் உளவுத் துறை முன்னாள் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக என் கணவர் புகார் கூறியதால் அவரது நண்பர் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜை வைத்து குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சிகள் நடத்தப்படுவதாக நிரோஷா தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்க வந்தது. அப்போது தாம்பரம் காவல் துறை ஆணையர் அமல்ராஜ் ஆஜராகி பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் திட்டம் இல்லை என்றார். இதையடுத்து காவல் துறை முடிவெடுப்பதற்கு முன்பே முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டதாக கூறி நிரோஷாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications