61 உயிர்களை குடித்த முகலிவாக்கம் கட்டட விபத்து வழக்கு.. 7 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் விசாரணை
சென்னை: சென்னை முகலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வத்திப்பெட்டி சைஸ், புறா கூண்டு அளவில் சென்னையில் சொந்த வீடு வாங்குவது பெரும்பாலானோரின் கனவாக உள்ளது. இதை சில ரியல் எஸ்டேட்டுகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நீர் நிலைகள் இருக்கும் பகுதி, தாழ்வான பகுதிகள், வாழ்வதற்கே தகுதியற்ற இடங்கள், சந்து பொந்துகள், கழிவுநீர் கால்வாய்கள் கூட அமைக்கப்படாத இடங்கள் என எதுவாக இருந்தாலும் சிலர் காசு கொடுத்து வீட்டை வாங்கிவிடுகிறார்கள். பிறகு அங்கு வெள்ளமோ, கட்டட சரிவோ ஏற்படும் போதுதான் தங்களது தவறை உணர்கிறார்கள்.
சில ரியல் எஸ்டேட்டுகளும் குறைந்த செலவில் வீட்டை கொடுப்பதால் தரமான பொருட்களை பயன்படுத்தாலேயே வீட்டை கட்டுகிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் முகலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்து. கடந்த 2014 ஆம் ஆண்டு முகலிவாக்கத்தில் 11 அடுக்குகளை கொண்ட இரு குடியிருப்புகள் கட்டடப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அதே ஆண்டு ஜூன் மாதம் அந்த 11 மாடி கட்டடம் விழுந்து விபத்து நடந்தது. அதில் அந்த கட்டடத்தில் தங்கியிருந்த, பணியாற்றியிருந்த 61 பேர் பலியாகினர். 27 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகே இருந்த மற்றொரு 11 அடுக்குமாடி கட்டடமும் அதே ஆண்டு நவம்பர் மாதம் இடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனையும் அமைத்திருந்தார். இந்த நிலையில் சிறப்ப புலனாய்வு குழு விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைந்துள்ளதாக தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு நபர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் பரிந்துரை அடிப்படையில் காப்பீட்டை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. அத்துடன் தற்போது 7 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications