அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீட்டை நீட்டிக்கலாமே.. அரசுக்கு ஐகோர்ட் யோசனை!
சென்னை : மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறுஆய்வு செய்யலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாணவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
2 முறை எழுதிய நீட் தேர்வில் 219, 250 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் இடம் கிடைக்கவில்லை என்று மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து, அரசு மறு ஆய்வு செய்யலாம் என ஆலோசனை கூறியுள்ளது.

மாணவி வர்ஷா
தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருபவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வின் காரணமாக மருத்துவ சீட் கிடைக்கவில்லை. மாணவி வர்ஷா இரண்டு முறை நீட் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. அவற்றில் முறையே 219, 250 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எனினும் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் துணை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார் வர்ஷா.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவி
அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த வர்ஷாவுக்கு, தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக 7.5% இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கிடைத்திருந்தால் தனக்கு சீட் கிடைத்திருக்கும், எங்களுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வர்ஷா, தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார்.

ஐகோர்ட்டில் வழக்கு
மாணவி வர்ஷாவின் இந்த மனு மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர் சுரேஷ் குமார் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் பள்ளிகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய மனுக்களையும், இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஏழை மாணவர்கள்
பின்னர் நீதிபதி சுரேஷ் குமார் பிறப்பித்த உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை இரு நீதிபதி அமர்வு நிராகரித்த நிலையில், மீண்டும் அதே நிவாரணத்தை இங்கு கோர முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே சமயம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு தான் நிதி உதவி செய்கிறது என்பதனால், அங்கு படிக்கக்கூடிய மாணவர்களும் வசதியான குடும்பங்களை சார்ந்தவர்கள் அல்ல.

அரசுக்கு யோசனை
அவர்களுடைய பொருளாதார சமூக நிலை என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு போல தான் உள்ளது. 7.5% இட ஒதுக்கிடை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து, அரசு மறு ஆய்வு செய்யலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் கருத்தாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசினுடைய கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்றும் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications