விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை - வீடுகளில் வைக்கும் சிலைகளை தனியாக கரைக்கலாம் - ஹைகோர்ட்
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி இல்லை என்றும் தனி நபர்கள் வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்காலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு விதித்துள்ள தடை செல்லும் என்றும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊர்வலமாக செல்லவோ அனுமதி இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தனி நபர்கள் வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை மெரீனா கடற்கரை தவிர பிற நீர் நிலைகளில் தனி நபர் இடைவெளியுடன் கரைக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா லாக்டவுன் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் என்று இந்து முன்னணி அமைப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தடை செய்த உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.. அதில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்துள்ளதாலும், மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும் அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனிடம் கேள்வி எழுப்பினார்
கொரோனா தொற்று சூழல் குறித்து தாங்கள் நன்கு அறிந்து உள்ளதாகவும், பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என தெரிவித்த நீதிபதிகள், சிலையை வைத்து வழிபட்ட பின் 5 அல்லது 6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளை பின்பற்றி பொதுமக்கள் அதனை பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது, அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என கேள்வி எழுப்பினர்
ஃபேஸ்புக்கில் வந்த போஸ்ட்.. யோகி செஞ்ச நல்ல காரியம்.. குவியும் பாராட்டுக்கள்.. உற்சாகத்தில் உபி பாஜக
அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மதுரை கிளை நீதிமன்றம் இதுபோன்ற வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. மக்களின் தனிநபர் வழிபாட்டிற்கு அரசு தடையோ கட்டுப்பாடோ விதிக்கவில்லை.மேலும், மெரினா கடற்கரை தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறு கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மெரினாவில் சிலைகளை கரைத்துவிட்டு செல்வதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது? மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே கூவம் ஆற்றில் கூட விநாயகர் சிலைகளை கரைக்கலாமே? சிலைகளை கரைக்க வரும் மக்கள் அங்கேயே தங்விடுவதில்லையே? என தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் அரசு என்ன செய்வது? என்று வாதத்தை முன் வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், கடந்த 22ம் தேதியே தமிழக அரசு விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. காலம் காலமாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. சிலைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது என மனுதாரர் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள். விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதால் எந்த ஒரு தொற்றுப்பரவலும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஊர்வலமாக சிலைகளை கொண்டுசெல்ல, சிவசேனாவும் இந்து முன்னணியும் மறுத்துவிட்டன. சாந்தோம் கடற்கரை பகுதியில் சிலைகளை கரைக்க தனிநருக்கு தடையில்லை. கடற்கரையை பயன்படுத்துவது தனிநபர்கள் விநாயகர் சிலையை பூஜை செய்த பிறகு, அருகில் உள்ள கோயில்களுக்கு வெளியேவோ, அல்லது தனிநபராக சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கலாம். இவை அனைத்தும் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் அடங்கும். மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்