சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா விரைவில் ஓய்வு.. பொறுப்பு தலைமை நீதிபதியாகப் போவது யார்?
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா வரும் மே 23ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருக்கிறார். இதையடுத்து ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த 2023 ஏப்ரல் 19-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர், கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 28ஆம் தேதி தலைமை நீதிபதியாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய கங்காபூர்வாலா வரும் மே 23ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications