"என் கணவரை என்கவுன்டர் பண்ண கூடாது" வழக்கு தொடர்ந்த ரவுடி படப்பை குணா மனைவி.. ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை: பிரபல ரவுடி படப்பை குணா, காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி எல்லம்மாள் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.
தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவரது மனைவி எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மூலம் பல மிரட்டல்கள் வருவதாகவும், வழக்குகளில் சரணடையத் தனது கணவர் தயாராக உள்ள நிலையில், புறநகர்ப் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அச்சப்படும்வகையில் என்கவுன்டர் திட்டம் ஏதும் இல்லை என்றும், சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் அனுமானம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி, எல்லம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications