ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்ட தோனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறியதாக ஐ.பிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டோருக்கு எதிராக, ரூபாய் 100 கோடி மானநஷ்ட ஈடு கோரி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான மகேந்திர சிங் தோனி, கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை 10 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பேட்டி அளிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டும் வருகிறது.

தோனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சம்பத்குமார் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு நடைபெற்றது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாரின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications