நாளை முக்கியமான நாள்.. செந்தில் பாலாஜி ரிலீஸ் ஆவாரா! ஜாமீன் வழக்கில் தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நாளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இவர் தனக்கு ஜாமீன் தரக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே இரு முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி மீண்டும் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத சூழலில் அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருந்தார்.
அக்டோபர் 10 ஆம் தேதி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் அவர் சிறைக்கு சென்ற நிலையில், சிறையில் இருந்தபடியே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் தர வேண்டும் என மனுவில் கோரி உள்ளார். அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம், திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மறுநாளே எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சருக்கு அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை எனவும், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார் எனக் கூறி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை அமலாக்கத் துறைக்கு அளிக்க நீதிபதி அறிவுறுத்தி, இதுகுறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படியும், மனுவுக்கு பதிலளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 20 ஆம் தேதி வரை 7 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனு இதுவரை 8 முறை ஒத்திவைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 10.30 மணியளவில் நீதிபதி ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது தீர்ப்பு அளிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications