1 வயதில் 1ஆம் வகுப்பு படிச்சீங்களா? அரசு பஸ் டிரைவருக்கு 50 ரூபாய் அபராதம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி!
சென்னை: பொய்யான தகவல்களுடன் வழக்கு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் ஓட்டுநருக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது பள்ளிச் சான்றுகள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளில் தனது பிறந்த நாளை 1969 எனக் குறிப்பிடுவதற்கு பதில், 1964 எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், சமீபத்தில் தான் அதை கவனித்ததாகவும், அதனை திருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.

இந்நிலையில், சீனிவாசன் கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மனுதாரரின் மனுவில் கூறியுள்ள ஆதாரங்களைப் பார்க்கும் போது, ஒரு வயதில் முதல் வகுப்பில் சேர்ந்தது போலவும், 13 வயதில் 1982 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பை முடித்துள்ளதாகவும் சொல்கிறார்.
மனுதாரர் கூறியுள்ளது முற்றிலும் பொய்யானது எனத் தெரியவந்துள்ளதாகச் சுட்டிக்காட்டி, முழுக்க முழுக்க பொய்யான தகவலை அவர் தெரிவித்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மனுதாரரான ஓட்டுநர் சீனிவாசனுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அந்த தொகையை இரண்டு வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications