என்ன நடக்கும்? பஸ் ஸ்டிரைக் போராட்டத்திற்கு எதிரான வழக்கு.. ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணை
சென்னை: தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

கடந்த டிச. மாதமே இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன் பிறகு இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதமே போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.. அதை நடத்தவில்லை.. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், என மொத்தம் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 20+ தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
இந்த விவகாரத்தில் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. நேற்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த தகவல் வெளிவந்தது முதலே படிப்படியாகத் தமிழ்நாட்டில் பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் பல இடங்களில் பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். காலை சென்னை உட்பட பல இடங்களில் கிட்டத்தட்ட வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருப்பினும், முதல் நாளில் எந்தவொரு பாதிப்பும் தெரியாது என்றும் மதியத்திற்கு மேல் பேருந்துகள் இயக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையிலும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு என்பது பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவிப்பது சட்டவிரோதம். போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்குத் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கைச் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications