வேட்புமனுவில் தவறான தகவல்! ஓ.பி.எஸ். மீதான விசாரணைக்கு பிப்.21 வரை தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்த புகாரில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை பிப்ரவரி 21 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞரும், தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி நிர்வாகியுமான மிலானி என்பவர், ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இதனிடையே இந்த வழக்கின் பின்னணி குறித்து இங்கே பார்க்கலாம்;

சிறப்பு நீதிமன்றம்
கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தேனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்தில் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிப்ரவரி 7-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஓ.ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கால அவகாசம்
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இன்று வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதேபோல புகார்தாரரான மிலானி தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன், இதுசம்பந்தமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை இணைத்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

பிப்.21 வரை தடை
இதை ஏற்று விசாரணையை பிப்ரவரி 21 -ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்கும் வரை நீட்டித்து உத்தரவிட்டார். ஓ.பி.எஸ். மீதும் அவரது மகன் மீது வழக்குத் தொடர்ந்துள்ள மிலானி என்பவர், தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications