யூடியூப் சேனல்களால் போலீசாரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக வழக்கு.. சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு!
சென்னை: யூ டியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

யூ டியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், குற்ற வழக்குகளில் யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ டியூப் சேனல்கள் வெளியிடும் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூ டியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, யூ டியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications