நீதிபதிகள் பற்றி சர்ச்சை பேச்சு.. ஆடிட்டர் குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: நீதிபதிகள் குறித்து துக்ளக் பத்திரிகை விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மூத்த வழக்கறிஞர் துரைசாமி அனுமதி கோரினார். இந்த வழக்கில், ஆடிட்டர் குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று 'துக்ளக்' பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய 'துக்ளக்' ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முந்தைய உத்தரவை ரத்து செய்து, குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திரும்பப் பெற்றார். அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எஸ்.குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.சேஷசாயி, குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரும் வகையில், தற்போதைய அரசின் தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து துரைசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications