ஜாபர் சாதிக் வழக்கு.. அமலாக்கத்துறை & திகார் சிறைக்கு சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறை, திகார் சிறை நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்தனர். இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், வழக்குப் பதிவு செய்து ஜாபர் சாதிக்கை கைது செய்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போதைப்பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை எனவும் அதன் பின்னர் சிறை மாற்ற உத்தரவு பெற்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாபர் சாதிக் தரப்பு வழக்கறிஞர், போதைப்பொருள் வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வர இருந்த நிலையில் திகார் சிறை நிர்வாகம் அளித்த சிறை மாற்ற உத்தரவு காலாவதியாகி விட்டது எனக் கூறினார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை, டெல்லி திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications