தமிழக உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்ய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்ய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்தது. இதையடுத்து தனியார் சுயஉதவி கல்லூரிகள் உட்பட பல கல்லூரி நிறுவனங்கள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் பதில் அளித்த பாரதியார் பல்கலைக்கழகம், தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. அதே சமயம் சென்னை ஹைகோர்ட்டும், தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க பாரதியார் பல்கலைக்கத்திற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால் கடந்த நவம்பர் பல்கலைக்கழக சிண்டிகேட் அமைப்பு ஒன்றாக சேர்ந்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கியது.
இதையடுத்து தனியார் சுயஉதவி கல்லூரிகள் உட்பட பல கல்லூரி நிறுவனங்கள் சென்னை ஹைகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. நீதிமன்ற உத்தரவை மீறி பாரதியார் பல்கலைக்கழகம் செயல்படுகிறது என்று வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் கடந்த விசாரணையின் போது, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உட்பட 8 பேரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.
இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவின்படி 7 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். ஆனால் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை.
இதனால் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுதினம் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர் மீது ஜாமீனில் வெளிவர கூடிய வழக்கு பதியவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.