மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக அவதூறு பரப்ப தடை... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகள் வெளியிட இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இதில் ஜெயக்குமார் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது தனது செல்வாக்கை பயன்படுத்தி சிலர் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் செய்தார்.

6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி, தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்படுவதாக ஜெயக்குமார் கூறியிருந்தார். அதோடு மகேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியும், எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மானநஷ்ட ஈடாக ரூ.1 கோடி
எனவே தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக் கோரியும், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இடைக்கால தடை
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட மகேசுக்கு தடை விதித்ததோடு, வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்ட விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications