சொத்து பத்திரம் போலி என்றால் மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும் தமிழக அரசாணை ரத்து! ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சொத்துப் பத்திரங்கள் குறித்த புகார்கள் வந்தால் அதனை தமிழக மாவட்ட பதிவாளரே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவில் கொண்டு வந்த 77ஏ, 77பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது என அறிவித்து அந்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பை வழங்கினர்.
தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின் பிரிவு 77 ஏ, பிரிவு 77 பி ஆகிய 2 உட்பிரிவுகளை கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு சேர்த்தது. அதன்படி போலியான அல்லது தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால் அவர் விசாரித்து குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் அந்த பத்திரங்களை செல்லாது என அறிவித்து உத்தரவு பிறப்பிக்கலாம்.

இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக் கோரி நித்யா பழனிசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.சுந்தர், என். செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிலஸ் பத்திரப்பதிவு சட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட உட்பிரிவுகள் இரண்டும் சட்டவிரோதமானது.
நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயல். இது போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள்தான் இரு தரப்பிலும் விரிவான விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்து ஒரு பத்திரம் போலியானதா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.
இந்த அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது. மாவட்ட பதிவாளர் நீதிமன்றத்தை போல செயல்பட முடியாது. இதனால் சொத்துகள் மீது கடன் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் என மனுதாரர் அந்த வாதத்தில் முன் வைத்திருந்தார். இதற்கு அரசு தரப்பு எதிர்வாதத்தை வைத்தது.
கடைசியாக இரு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவில் கொண்டு வந்த 77ஏ, 77பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது என அறிவித்து அந்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பை வழங்கினர்.












Click it and Unblock the Notifications