பகலை இரவு என்றால் ஏற்க முடியுமா.. வேலுமணிக்கு எதிரான ஊழல் புகாரை தள்ளுபடி செய்ய முடியாது- ஹைகோர்ட்
சென்னை: கடந்த ஆட்சியின்போது பகலை இரவாக்கி, இரவை பகலாக்கி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்திருந்தால் அதையுமா ஏற்க முடியும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரி அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திமுக சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சாார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு
அதிமுக ஆட்சியில் கோரிக்கை
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிந்துள்ளதாகவும், அதில் வேலுமணி மீது வழக்குப் பதிவுசெய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமைச் செயலாளருக்கு அறிக்கை அனுப்பினார். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதால், இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதாவது அதிமுக ஆட்சி நடைபெற்ற போது தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆட்சி மாறியது
ஆனால், மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும், அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்பதால், இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை முடிக்க வேலுமணி கோரிக்கை
அப்போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எஸ். பி.வேலுமணி தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டதால் வழக்கை தொடர்வது தேவையற்றது என வாதாடினார்.
நீதிமன்றம் முடித்து வைக்கவில்லை
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் புகாரை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை தாக்கல் செய்த அறிக்கைக்கு மனுதாரர்கள் தரப் பில் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும், மேலும் முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த புகாரை முந்தைய (அதிமுக) அரசுதான் முடித்து வைத்தது. நீதிமன்றம் முடித்து வைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
பகலை இரவாக்கினால் ஏற்க முடியாது
கடந்த ஆட்சியின்போது பகலை இரவாக்கி, இரவை பகலாக்கி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்திருந்தால் அதை ஏற்க முடியாது. அறிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும். இவ்வாறு கூறிய நீதிபதிகள் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். எனவே எஸ்.பி.வேலுமணிக்கு இந்த வழக்கில் சிக்கல் தொடர்கிறது.