ரேஷனில் மசூர் பருப்பு வினியோகம்? 8 வாரத்தில் முடிவு எடுக்க அரசுக்கு உத்தரவு.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: பொது வினியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் வினியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதி செய்கிறது.

இந்த நிறுவனம் சார்பில் பொது வினியோக திட்டத்தில் மசூர் பருப்பை வினியோகிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
துவரம் பருப்புக்கு பதில், அதே சத்துக்களை கொண்ட, விலை குறைவான மசூர் பருப்பை பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. பின்னர், மசூர் பருப்பை போல தோற்றமளிக்கும் கேசரி பருப்பும் புழக்கத்தில் உள்ளதாகக் கூறி மசூர் பருப்புக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற்று 2007ல் தமிழக அரசு உத்தரவிடப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அறிவியல் முறைகளை கையாண்டு, மசூர் பருப்பை அடையாளம் கண்டு, அதை பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்க உத்தரவிட்டது. அதன்படி மசூர் பருப்புக்கு அனுமதியளித்து 2017ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
‛‛நேரில் வாங்க’’.. அறநிலையத்துறை செயலர், ஆணையர் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு.. அவமதிப்பு வழக்கில் அதிரடி
சமீபத்தில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒரு கிலோ 130 ரூபாய் என்ற அடிப்படையில் 583 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே எடையில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படும் மசூர் பருப்பு கொள்முதல் செய்ய 382 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால், துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரிய அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications